சூர்யாவும் பிரேம்ஜியும் ராயப்பேட்டை பகுதியில் திருட்டுத் தொழில்
செய்து வருகிறார்கள். இவர்கள் ஒருநாள் டாஸ்மாக் கடையில் சென்று
கொள்ளையடித்து வருகிறார்கள். அதில், நிறைய பேர் கூட்டு இருப்பதால்,
இவர்களுக்கு குறைந்த அளவே பணம் கிடைக்கிறது. அதிக பணம் வேண்டும் என
நினைக்கும் இவர்கள், கஸ்டமஸ் அதிகாரிகள் போல் நடித்து கப்பலில் பணம்
வைத்திருக்கும் ஒரு கும்பலிடம் சென்று பணத்தை எடுத்து வந்து விடுகிறார்கள்.
பணத்தை பறிகொடுத்த கும்பல், சூர்யாவை அடையாளம் கண்டுகொள்கிறது. அவன்
கஸ்டம்ஸ் அதிகாரி இல்லை என்பதை அறிந்து, அவனை தேடி கண்டுபிடித்து,
அவனிடமிருந்து பணத்தை எப்படியாவது கைப்பற்றவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
இதற்கிடையில், சூர்யா தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் நயன்தாரா மீது
காதல் கொள்கிறார். நயன்தாராவிடம் தனது காதலை சொல்ல ஒவ்வொரு முறையும்
முயற்சிக்கிறார்.
நயன்தாரா ஒரு மருத்துவமனையில் நர்ஸாக பணிபுரிந்து வருகிறார். அவர் அதே
மருத்துவமனையில் நிரந்தர பணியாளராக பணியாற்ற துடிக்கிறார். ஆனால்,
மருத்துவமனை டீனோ மூன்றரை லட்சம் கொடுத்தால் அவளை பணியில் நிரந்தரம்
செய்வதாக கூறுகிறார். இதனால் அந்த பணத்தை எப்படியாவது புரட்ட
முடிவெடுக்கிறாள். ஒருகட்டத்தில் இதை தெரிந்துகொண்ட சூர்யா, அவளுக்கு உதவி
செய்வதாக உறுதிகொள்கிறார். அப்போது, சூர்யாவின் காதலையும் நயன்தாரா
ஏற்றுக்கொள்கிறார்.
இந்நிலையில், பணத்தை பறிகொடுத்த கும்பல் சூர்யாவை தேடி கண்டுபிடித்து,
தங்களுடைய இருப்பிடத்திற்கு கொண்டு சென்று விசாரிக்கிறார்கள். ஆனால்,
சூர்யாவோ தன்னிடம் பணம் இல்லை என்று அவர்களிடம் கூறுகிறார். கடைசியில்,
அந்த கும்பலிடம் சண்டை போட்டு அங்கிருந்து தப்பிக்கிறார்கள். சண்டையின்
முடிவில், கொள்ளையடித்த பணத்தை எடுத்துக் கொண்டு ஒரு காரில் செல்லும்போது,
விபத்துக்குள்ளாகி இவர்களது கார் சின்னாபின்னாமாகிறது.
சூர்யாவும், பிரேம்ஜியும் இறந்துவிட்டதாக இவர்களை துரத்தி வந்த கும்பல்
திரும்பிச் செல்கிறது. இந்நிலையில், சூர்யா மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார். ஒரு வாரம் கடந்ததும், அங்கிருக்க பிடிக்காமல்,
மருத்துவமனையில் இருந்து வெளியே வருகிறார். அப்போது, கருணாஸ், சண்முகராஜ்,
ஸ்ரீமன் ஆகியோர் கொண்ட ஒரு கும்பல் சூர்யா மீது ஒரு கண் வைக்கிறது. அவர்கள்
பணத்தை தேடி வந்த கும்பல்தான் என்று நினைத்து, அவர்களிடமிருந்து
சூர்யாவும் பிரேம்ஜியும் தப்பித்து சென்று தங்கள் வீட்டை அடைகின்றனர்.
அப்போது அந்த வீட்டில் ஏதோ உருவம் நடமாடுவதுபோல் சூர்யாவுக்கு
தெரிகிறது. சூர்யாவை துரத்தி வந்த கருணாஸ், ஸ்ரீமன் கும்பல் அவரது
வீட்டுக்கும் வந்துவிடுகிறது. அவர்களிடமிருந்து தப்பித்து செல்ல
முடிவெடுக்காமல் நேருக்கு நேர் சந்திக்க புறப்படும் சூர்யாவுக்கு அதிர்ச்சி
காத்திருக்கிறது. அவர்கள் அனைவரும் பேய் என்பது அவருக்கு தெரிய வருகிறது.
உடனே, அங்கிருந்து பயந்து ஓடி ஒரு கோவிலுக்குள் செல்கிறார்.
அப்போது, கோவிலில் இருக்கும் பெரியவர் சூர்யாவை பார்த்து, நீ செத்துப்
பிழைத்தவன் என்பதால்தான் பேய்களெல்லாம் உன் கண்களுக்கு தெரிகிறது.
அவர்களுடைய ஆசையை உன் மூலம் தீர்த்துக் கொள்ள உன்னைத் தேடி
வந்திருக்கிறார்கள். இது உனக்கு ஒரு வரம் என்று கூறி, சூர்யாவை மேலும்
வியப்படைய வைக்கிறார்.
பேய்கள் தங்கள் கண்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால், சூர்யாவும்,
பிரேம்ஜியும் நிஜவாழ்க்கையில் பேய்களை தெரிந்துகொள்ளும் ஆதிகாலத்து
டெக்னிக்கை பயன்படுத்துகிறார்கள். செல்போனில் போட்டோ எடுத்தால் பேய்கள்
போட்டோவில் தெரியாது. அதனால் செல்போனில் போட்டோ எடுத்து யார் பேய், யார்
மனிதன் என்பதை தெரிந்துகொள்கிறார்கள். அப்போது பிரேம்ஜியையும் சூர்யா
போட்டோ எடுக்கிறார். ஆனால், அந்த போட்டோவில் பிரேம்ஜி தெரிவதில்லை.
அப்போதுதான் சூர்யாவுக்கு பிரேம்ஜி இறந்துவிட்டான் என்பது தெரிகிறது.
இருப்பினும் ஆவியாக தன் பக்கத்திலேயே இருப்பதால் சூர்யாவுக்குள் எந்த
மாற்றமும் தெரிவதில்லை. எப்பவும் போல் ஜாலியாக இருக்கிறார்.
ஒருகட்டத்தில் நயன்தாராவுக்கு உதவி செய்வதாக கூறிய சூர்யாவிடம் தற்போது
எந்த பணமும் இல்லாததால், பேய்களின் உதவியை நாடி அந்த பணத்தை சம்பாதிக்க
முடிவெடுக்கிறார். அதன்படி, பேய்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவர்களிடம் ஒரு
சந்திப்பு ஏற்படுத்துகிறார். எனக்கு உதவி செய்தால், உங்களுக்கும் உதவி
செய்கிறேன் என்று கூறுகிறார்.
இறுதியில், பேய்கள் எல்லாம் சூர்யாவுக்கு உதவி செய்து நயன்தாராவுக்கு
வேண்டிய பணத்தை பெற்றுக் கொடுத்ததா? பேய்களின் ஆசைகளை சூர்யா
நிறைவேற்றினாரா? என்பதை விறுவிறுப்புடனும், திகிலுடனும்
சொல்லியிருக்கிறார்கள்.
0 comments:
கருத்துரையிடுக