ஒரே நேரத்தில் அதிக திரையரங்குகளில் படத்தை வெளியிடும் கார்ப்பரேட்டின் பாரசூட் தியரி நடைமுறைக்கு வந்த பிறகு, அதுவரை இருந்து வந்த, திரையரங்குகளில் படம் வெளியாவதற்கும், அப்படங்கள் திரையரங்குகளில் ஓடும் நாள்களுக்குமான தாள லயத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்படத் தொடங்கின.
முன்பு குறைவான திரையரங்குகளில் படங்கள் வெளியாகி அதிக தினங்கள் ஓடின. இன்று அதிக திரையரங்குகள் குறைவான தினங்கள் என அப்படியே தலைகீழ் மாற்றம். இதனால், மாஸ் நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது சின்ன பட்ஜெட் படங்கள் திரையரங்குகள் கிடைக்காமல் நெருக்கடிக்குள் தள்ளப்படுகின்றன. அப்படியே கிடைத்தாலும் ஒன்றே இரண்டோ தினங்கள். மூன்றாவது நாள் திரையரங்கைவிட்டு தூக்கப்படும்.
சின்ன பட்ஜெட் படங்கள் எதிர்கொள்ளும் இந்த நெருக்கடிக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் ஒரேயொரு தீர்வை நெடுநாள்களாக முன்வைக்கிறது. அது, பெரிய பட்ஜெட் படங்களின் வெளியீட்டை கட்டுப்படுத்துவது. படங்களின் எண்ணிக்கையை அல்ல, அவை வெளியிடும் நாள்களின் எண்ணிக்கையை வரையறைக்குள் கொண்டு வருவது.
ரூ.15 கோடி மற்றும் அதற்கு அதிக பொருட்செலவில் தயாராகும் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை அதன் தயாரிப்பாளர்கள் பொங்கல், குடியரசு தினம், தமிழ்ப்புத்தாண்டு, மே தினம், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் ஆகிய பத்து நாட்களில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று புதிய கட்டுப்பாடை தயாரிப்பாளர்கள் சங்கம் விதித்துள்ளது. இந்த புதிய விதிமுறை வரும் ஜுன் 1 -ஆம் தேதியிலிருந்து அமலுக்கு வருவதாகவும் அறிவித்திருக்கிறார்கள்.
இப்படி தயாரிப்பாளர்கள் சங்கம் கட்டுப்பாடு விதிப்பது இது முதல்முறையல்ல. எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைவராக இருந்தபோதும், இதேபோன்ற ஒரு விதியை நடைமுறைக்கு கொண்டு வந்தனர். ஆனால், அந்த விதிமுறை எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன் விஜய் நடித்த படமே முதலில் உடைத்தது.
இந்நிலையில், தாணுவின் அறிவிப்பு நடைமுறைக்கு சாத்தியமா என்ற கேள்வி எழுவது இயல்பானது.
0 comments:
கருத்துரையிடுக